★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Tuesday, November 20, 2012

இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் பாகம் -2


          நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 22:13).

            நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அல்பாவும் ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். அதாவது அவரே ஆரம்பமும் முடிவுமாயிருக்கிறார். முக்காலமும் அறிந்த ஒரே ஆண்டவர் நம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! முந்தினவராயிருந்து, சர்வத்தையும் படைத்தவர். 'சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்' (ரோமர் 11:36)
.
          'ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்' (22:14). இயேசுகிறிஸ்து எப்போது வேண்டுமானாலும் வரலாம், நாம் ஆயத்தமாயிராத பட்சத்தில், நாம் கிறிஸ்து இல்லாத நித்தியத்தை, சந்திக்க வேண்டியதாயிருக்கும். வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி இரண்டு அத்தியாயங்களில் காணப்படும் அற்புத பரலோகத்தின் அனுபவங்களை உண்மையாக ருசிக்க வேண்டுமானால், நாம் அவருடைய கற்பனைகளின்படி செய்யத்தான் வேண்டும். அவருடைய
கற்பனைகளின்படி செய்கிறவர்களே பாக்கியவான்கள்.
.
          'நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும்,
விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்' (15ம் வசனம்).  நாய்கள் என்பது அசுத்தமானவர்களை, தேவன் அருவருக்கிற பாவங்களை செய்கிறவர்களை குறிக்கிறது. இப்போது மேலை நாடுகளில் ஓரின திருமணத்திற்கு அரசே அனுமதித்திருக்கிறது. எத்தகைய கொடூரமான பாவம் இது! கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லுகிற நாடுகளிலேயே இந்த அசுத்தமான பாவத்தை அனுமதித்தால், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாளில் மற்றவர்கள் எங்கு போவார்கள்?  மேலே வரிசையில் காணப்படும் அசுத்தர்கள் யாவரும் நகரத்திற்கு புறம்பே, நரகத்தில் இருப்பார்கள். சுத்தர்கள் வாசம் செய்யும் நகரத்தில் அசுத்தர்களுக்கு நிச்சயமாக இடமில்லை. இந்த உலகத்தில் அவர்களுக்கு இடமிருக்கலாம், ஆனால் பரலோகத்தில் நிச்சயமாக அவர்களுக்கு இடமில்லை!
.
          'சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக;  தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்'(16-17வசனங்கள்).
.
        இயேசுகிறிஸ்துவே தமது தூதனை அனுப்பி, இந்த கடைசி கால செய்திகளை வெளிப்படுத்தினார். அவரே தாவீதின் வேரும், சந்ததியுமாக, இராஜாதி இராஜாவாக என்றென்றும் அரசாளுவார். விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்பட்ட லூசிபர், பெருமை கொண்டு, தேவ மகிமையை இழந்தபோது, தனக்கு கொடுக்கப்பட்ட பாக்கியத்தை இழந்தான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ, விடிவெள்ளி நட்சத்திரம் மட்டுமல்ல, பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கிறார்.
.
        ஆவியானவர் கிரியை செய்கிற இந்த நாட்களில், மணவாட்டி சபையும், ஆவியானவரும், இயேசுகிறிஸ்துவே சீக்கிரம் வாரும் என்று கிறிஸ்துவை அழைக்கிறார்கள். ஆவியானவர் கிரியை செய்ய முடியாத இராக்காலம் சீக்கிரம் வர இருக்கிறது. அந்திக்கிறிஸ்துவின் ஆதிக்கம் வரும்போது, ஆவியானவரும் சபையும் எடுத்துக்கொள்ளப்படும். இப்போது கிறிஸ்துவிடம் வராதபடி மனம் கடினப்படுகிறவர்கள், அப்போதும் கடினப்படுவார்கள். அதினால் ஏற்படப்போகிற மகா உபத்திரவங்களை குறித்து கடந்து நாட்களில் நாம் பார்த்தோம். இதை வாசிக்கிற நாமும், மனம் கடினப்படாதபடி, கொடுக்கப்படுகிற இந்த கிருபையின் நாட்களிலேயே கர்த்தரை ஏற்றுக் கொள்வோம். தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். ஆமென்!
.
         'இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்' (18-19 வசனங்கள்).
.
         இந்த புஸ்தகத்தை வாசிக்கிற ஒவ்வொருவரும், கேட்கிற ஒவ்வொருவரும், இதிலிருந்து ஒரு வார்த்தையையும் கூட்டவோ, எடுத்துப்போடவோ கூடாது. இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்தார். அவர்கள் இதன் வார்த்தைகளை விட்டுவிட்டு, தேவன் கொடுக்காத வெளிப்பாடுகளை தங்கள் ஆவியிலிருந்து எடுத்து, தேவன் கொடுத்த வார்த்தைகளின் அர்த்தங்களை மாற்றினாலோ, அல்லது கூட்டி சொன்னாலோ, ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பெயர் எடுத்துப்போடப்படும் என்று கிறிஸ்து எச்சரிக்கிறார். ஆகவே இந்த புத்தகத்தை நாம் மற்ற சாதாரண புத்தகத்தை போல கையாளாதபடி, மிகுந்த எச்சரிக்கையோடு படித்து, அதிலுள்ள கற்பனைகளை கைக்கொள்வோமாக.
.
         'இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்' (20ம் வசனம்). ஆம், கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார், அவருடைய வருகையை எதிர்ப்பார்க்கிறவர்கள் இயேசுவே சீக்கிரம் வாரும் என்று அவரை அழைப்போமாக! நம்முடைய கர்த்தராகிய 'இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்' (21ம் வசனம்).
.
         இந்த பாகத்தோடு, வெளிப்படுத்தின விசேஷத்தின் கட்டுரைகள் முடிவடைகிறது. நாம் வாழுகிற நாட்கள் கடைசி காலமாய் இருக்கிறபடியால், இந்த கட்டுரைகளை எழுதும்படி ஆவியானவர் ஊக்குவித்தார். அநேகருக்கு இந்த வார்த்தைகள் வேதாகமத்தில் இருப்பதே தெரியாது. நான் சிலருடன் இதன் வார்த்தைகளை பகிர்ந்து கொண்டபோது, ஓ, இந்த வார்த்தைகள் வேதாகமத்தில் இருக்கிறதா என்று கேட்டார்கள். அவர்களும் சத்தியத்தை அறியவேண்டும், வேதத்தில் தேவன் வெளிப்படுத்திக் கொடுத்த விசேஷங்களை அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கட்டுரைகள் ஜெபத்தோடு அனுப்பபட்டது. இவற்றை வாசிக்கிறவர்களும், கேட்கிறவர்களும், இதன்படி செய்ய நினைக்கிறவர்களும், வேத வார்த்தைகளின்படி நிச்சயமாகவே பாக்கியவான்கள்.
.
          ஆவியானவர் கற்றுக்கொடுத்த வார்த்தைகளை படித்த நாம், இப்போது இருக்கிறபடியே இருக்காதபடி, 'நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்' என்ற வார்த்தைகளின்படி பரிசுத்தத்திலும், நீதியிலும் அதிகமாய் முன்னேறுவோம். நமக்காக தேவன் உருவாக்கி வைத்திருக்கிற பரலோக ராஜ்யம் காத்திருக்கிறது என்கிற பூரிப்புடனே உலகத்தில் காணப்படும் உபத்திரவங்களையும், துன்பங்களையும், துக்கங்களையும் கடந்து செல்வோம்.
.
        ஏற்கனவே நாங்கள் எழுதியிருந்தபடி, அநேகர் வெளிப்படுத்தின விசேஷத்தின் விளக்கவுரைகளை எழுதியிருந்தாலும், ஒருவரும் சொல்ல
முடியாது, தாங்கள் எழுதின விளக்கமே சரி என்று. இருந்தாலும், இந்த கடைசி நாட்களில் சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு எழுதப்பட்ட இந்த கட்டுரைகளை வாசித்து, ஒவ்வொருவரும் பிரயோஜனப்பட்டிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம். தேவ வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்து, தேவன் கொடுக்கும் இலவசமான ஜீவத்தண்ணீரை பெற்றுக் கொண்டு, பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும்படி ஒவ்வொருவரையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம். தேவன் தாமே இவைகளை ஒவ்வொருவருக்கும் ஆசீர்வதித்து கொடுப்பாராக! ஆமென் அல்லேலூயா! 

  பரலோகம்தான் என் பேச்சு 
  பரிசுத்தம்தான் என் மூச்சு
  கொஞ்சகாலம் இந்த பூமியிலே
  இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
.
 
சங்கீதக்காரன் தாவீதை பார்ப்பேன்
பாடச் சொல்லி கேட்பேன்
சேர்ந்து பாடிடுவேன்
நடனம் ஆடிடுவேன்
.
என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும்

ஜெபம்
           எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வெளிப்படுத்தின விசேஷத்தின் காரியங்களை நாங்கள் அறிந்து கொள்ள தேவன் பாராட்டடின கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். சீக்கரம் வர இருக்கிற உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலங்களுக்கும், அந்திக்கிறிஸ்துவின் கொடூர ஆட்சிக்கும் நாங்கள் தப்பும்படி, மணவாட்டி சபையாக வாழ எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுகிறிஸ்து உலகத்தில் ஆட்சி செய்யும் ஆயிரம் வருட அரசாட்சியில் அவரோடு நாங்களும் ஆளுகை செய்யும்படியாக, எங்கள் வாழ்க்கையில் எல்லா இடத்திலும் உண்மை இருக்கும்படியாகவும், கர்த்தர் கொடுத்த தாலந்துகளில் உண்மையுடனும், அதை வர்த்திக்க செய்து, தேவனால் பாராட்டப்படும் கிருபையை பெற்றுக் கொள்ளவும் கிருபை செய்யும். பரம எருசலேமில் வாழப்போகும் பரிசுத்தவான்களில் நாங்களும் இருக்கும்படி எங்கள் பெயர்கள் ஜீவபுஸ்தக்தில் எழுதப்பட்டிருக்கும் பாக்கியத்தை தாரும். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மோடு யுகாயுகமாய் வாழும் அந்த மாபெரும் பாக்கியத்தை எங்களுக்கு கட்டளையிடுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


No comments:

Post a Comment